Skip to main content
தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்கிறார்
அவர் (தேவன்)சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச 3:11 ).
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, காலம் நிறைவேறினபோது சரியான காலத்திலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாதாரண மானிடனாக (கலா 4:5) மனுஷனை அவனுடைய பாவத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த பூலோகத்துக்கு (சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வந்தது எதோ தற்செயலாக நடை பெற்ற நிகழ்ச்சியல்ல, அது ஏற்கனவே பிதாவினால் முன்குறிக்கப்பட்டது, திட்டமிடப்பட்டது. அவர் பிறந்த காலம் அரசியல் ரீதியாக சரியான காலம், கலாச்சார ரீதியாகவும் சரியான காலம், அல்லேலூயா ! அதே போல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சரியான காலத்தில் நடை பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை, ஏனெனில் அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்து முடிகிறவர். அல்லேலூயா !
பிரியமானவர்களே, தேவனுக்கு நம்முடைய வாழ்க்கையில் எதை, எப்போது, எங்கே, எப்படி, எந்த காலத்தில் செய்ய வேண்டும் என்று தெரியும், யாருமே அவருக்கு எதை, எப்படி, எங்கே, என்ன காலத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுக்க வேண்டிய அவசியமில்லை, அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக எங்களுடைய வாழ்க்கையில் செய்து முடிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, 1பேதுரு 5:6 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது, “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” என்று. தேவன் தன்னை ஏற்றகாலத்திலே உயர்த்தும்படிக்கு யோசேப்பு தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய சித்தத்தை செய்து அவருடைய பலத்த கரத்துக்குள் அடங்கியிருந்த போது தேவன் அவனுடைய வாழ்க்கையில் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்து அவனை அந்நிய தேசத்தில் ஏற்றகாலத்திலே உயர்த்தி வைத்தார். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நீங்களும் யோசேப்பைப் போல் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தை செய்யும் போது தேவன் உங்களுடைய வாழ்க்கையிலும் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்து முடிக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார், அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment