நன்மையான ஈவுகளை மாத்திரம் கொடுக்கும் நமது பரலோக தகப்பன்

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத் 7:11). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நமது பரலோக பிதா உங்கள் மீது வைத்திருக்கிற அன்பும், பாசமும், நேசமும், விருப்பமும், பராமரிப்பும் , உங்கள் பூலோக உலகப்  பிரகாரமான பெற்றோர் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பை பார்க்கிலும் , அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கிற பாசத்தைப் பார்க்கிலும், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கிற நேசத்தைப் பார்க்கிலும், அவர்கள் உங்களை பராமரிப்பதை பார்க்கிலும் அதிகமானது , கனமானது, மேன்மையானது. பரலோக பிதாவின் அன்பு , இரக்கம், கிருபை கடலைப் போன்று, சமூத்திரத்தைப் போன்று மிகப் பெரியது. உங்கள் பூலோக பெற்றோரின் அன்பு , மனுஷரின் அன்பு கடலில் உள்ள, சமூத்திரத்திலுள்ள ஒரு துளி தண்ணீர் போன்றது. சில சமயங்களில் பூமிக்குரிய பெற்றோர்களால் தாங்கள் விரும்பியதை தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வசதியற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் பரலோக தகப்பனோ ஐசுவரிய சம்பன்னர் , அவரால் நமது தேவைகள் எதுவாக இருந்தாலும் தமது ஐசுவரியத்திலிருந்து தாராளமாக கொடுக்க முடியும். சில சமயங்களில் பூமிக்குரிய பெற்றோர் தாங்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நன்மையானதை கொடுப்பதாக நினைத்து தெரியாமல் தீமையானதை கொடுத்து விடுவார்கள், அதனால் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போவதட்கு அவர்களும் ஒரு காரணமாய் இருப்பார்கள். ஆனால் நமது பரலோக பிதாவோ சர்வஞானமுள்ளவர், நமக்கு நன்மையானது எது என்று அவருக்குத் தெரியும், அவர் நாம் அவரிடம் கேட்க்கின்ற எல்லாவற்றையும் கொடுக்காமல், அவர் நமக்கு நன்மையான ஈவுகளை மாத்திரமே கொடுக்கின்றார். அல்லேலூயா ! பரலோக தகப்பன் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வையுங்கள், அவர் உங்களுக்காக நல்ல எதிர்கால திட்ட்ங்களை வைத்திருக்கிறார். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தீங்குக்கு பாதுகாத்து , உங்கள் தேவைகளை சந்திப்பாராக. ஆமென்.

Comments