நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிருங்கள்

நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு (நீதி 23:17 b). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தருக்குப் பயப்படுகிற இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகமானது நிரந்தரமானதல்ல இது தட்காலிகமானது, ஆகவே இந்த உலகத்தில் நாம் நம்முடைய இஷ்டப்படி வாழலாம் என்று நினைத்து துன்மார்க்கத்தனமாய் வாழாமல், நாம் இந்த உலகத்தில் பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் கர்த்தருடைய வார்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பயப்படுகிற பயத்துடனே நடந்து கொண்டு (1பேதுரு 1:17 ) கர்த்தருடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும். அல்லேலூயா ! வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது,   போத்திபாரின் மனைவி யோசேப்பை தன்னுடன் சயனிக்குமாறு கட்டாயப்படுத்திய போது ‘ வாலிப பருவத்தில் இருந்த யோசேப்பு கர்த்தருக்கு விரோதமாக அந்த பாவத்தை செய்ய துணியாமல் ,தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி (ஆதி 39:9) என்று சொல்லி அவர் வாழ்ந்த போத்திபாரின் வீட்டை விட்டே ஓடிப்போனார், காரணம் யோசேப்பு நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தமையே. அல்லேலூயா ! ஆகவே நாங்களும் யோசேப்பை போல நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு இந்த பூலோகத்தில் வாழ்ந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவோம். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments