Skip to main content
பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது கர்த்தருக்கு லேசான காரியம்
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும் (2நாளா 14:11). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சாலொமோனின் புதல்வன் ரெகொபெயாம் ஆட்சி காலத்தில் இஸ்ரவேல் தேசமானது, வடக்கு ராஜ்ஜியம் (10 கோத்திரம்) , தெட்க்கு ராஜ்ஜியம் ( 2 கோத்திரம்) என இரண்டாகப் பிளக்கப்பட்ட்து. 10 கோத்திரங்களைக் கொண்ட வடக்கு ராஜ்ஜியம் இஸ்ரவேல் தேசம் (சமாரியா தலைநகரம்) என்றும், 2 கோத்திரங்களைக் கொண்ட தெட்க்கு ராஜ்ஜியம் யூதா தேசம் (எருசலேம் தலைநகரம்) என்றும் அழைக்கப்பட்டது. எருசலேமை தன் தலைநகராகக் கொண்ட யூதா தேசத்தை ஆட்சி செய்த 3 வது ராஜா தான் ஆசா. இவன் 41 ஆண்டுகள் தேசத்தை ஆட்சி செய்ததாகவும் அவனுக்கு யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை இருந்ததாக (2நாளா 14:8) வேதம் சொல்லுகிறது. இவன் ராஜ்ய பாரம் ஏறியவுடன் தேசத்தில் இருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றினதுடன், விக்கிரக தோப்புக்களையும் அகற்றி, தோப்பிலே அருவருப்பான விக்கிரங்கங்களை உண்டு பண்ணின தனது பாட்டியையும் ராஜாதியாய் இராதபடி விலக்கிப் போட்டு (1இரா 15:11-13) கர்த்தருடைய பார்வைக்கு செம்மையாதை செய்தான், இவனது நாட்களில் தேசம் அமரிக்கையாயிருந்ததாக வேதம் சொல்லுகிறது. இவனுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் யுத்தம் செய்ய வந்த போது, ஆசா தனது பராக்கிரமான யுத்த சேனைகளைச் சார்ந்திருக்காமல், ஆசா தேவனை நோக்கி ‘கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்’ ஏன்று ஜெபிக்கிறான். தேவனும் அவன் அவரை சார்ந்திருந்தபடியால் அவனுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுத்து எத்தியோப்பியர்களை ஆசா முன்பாகவும், யூதா முன்பாகவும் அவர்கள் மீண்டும் பலங்கொண்டு திரும்பி எழும்பாத வண்ணம் முறியடித்துப் போடுகிறார் (2நாளா 14:12-13). ஆசாவிடம் இருந்த படையிலும் இரண்டு மடங்கு அதிகமான படை எத்தியோப்பிய மன்னன் சேராவுக்கு இருந்ததது, ஆனால் கர்த்தருக்கு இதெல்லாம் இலேசான காரியம், அவர் யுத்தத்தில் யூத ராஜ சிங்கம், அவர் ஆசாக்குக்கும் , யூதா ஜனங்களுக்கும் யுத்தத்தில் மிகப் பெரிய ஜெயத்தைக் கொடுத்தார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் மனுஷர்கள் மீது, மருத்துவர்கள் மீது, வழக்கறிஞ்சர்கள் மீது, உங்களுடைய பெலத்தின் மீது, உங்களுடைய அறிவின் மீது நம்பிக்கை வைக்காமல், ஆசாவை போல் இவை எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுத்த தேவன் மீது, அவருடைய பெலத்தின் மீது நம்பிக்கை வைத்து, விசுவாசம் வைத்து வாழ்க்கையில் முயற்சி எடுக்கும் போது தேவன் உங்களுடைய வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். வேதம் சொல்லுகிறது குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும் ஜெயமோ கர்த்தரால் வரும் என்று (நீதி 21:31). கர்த்தரையே சார்ந்திருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் ஜெயம் தான். பிரியமானவர்களே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது அவருக்கு லேசான காரியம். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment