Skip to main content
தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார்
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை (1கொரி 2:9). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன், அவருக்காய் காத்திருந்தவர்களுக்கு, அவரில் அன்பு கூறுகிறவர்களுக்கு அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், அநேக பூலோக ஆசீர்வாதங்களையும் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார், ஆனால் அவற்றை நமது மாமிச கண்களினால் காணவும் முடியாது, அவற்றை நமது காதுகளினால் கேட்கவும் முடியாது, அவைகள் மனுஷனாகிய நம்முடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. இதைத்தான் நாம் ஏசாயா 64:4 இல் இவ்வண்ணமாக வாசிக்கிறோம் ‘தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை’ என்று. அல்லேலூயா ! அவருடைய கிரியைகள் பெரியவைகளாகவும், பயங்கரமானவைகளாகவும் இருக்கின்றன, அவருடைய கிரியைகளை எந்த மனுஷனாலும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது. தேவன் அவ்வளவு பெரியவர். அல்லேலூயா ! தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வையுங்கள். தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment